படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்! அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்
படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு குறித்து உரையாற்றினார்.
இதன்போது, லசந்த விக்ரமதுங்க தொடர்பில் உரையாற்ற போவது குறித்து, சஜித் பிரேமதாச முன்னரே அறிவிக்கவில்லை என ரிஸ்வி சாலி கூறினார்.
பிமல் ரத்னாயக்க காட்டம்
இதனையடுத்து, நான் பேசும் போது நடுவில் வர வேண்டாம் என பிரதி சபாநாயகரை சஜித் எச்சரித்தார்.
உடனே எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சண்டியர்கள் நாடாளுமன்றத்திற்குள் வந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், பிரதி சபாநாயகரை அவமதித்தமைக்கு சஜித் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும், அர்ச்சுனா நேற்றையதினம் சபாநாயகரை 'Shame' என்ற வார்த்தையை உபயோகித்து அவமதித்ததாகவும், தயாசிறி ஜயசேகர ஆளும்கட்சி உறுப்பினர் மீது தவறான வார்த்தையை உபயோகித்ததாகவும் பிமல் சுட்டிக்காட்டினார்.
அர்ச்சுனாவுக்கு எச்சரிக்கை
இதனையடுத்து, சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், அர்ச்சுனா சபையில் வாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், நீங்கள் ஆசனத்தில் அமரவில்லை என்றால் படையினரின் உதவியுடன் உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவேன் என அர்ச்சுனாவை எச்சரித்தார்.
மேலும், நீங்கள் சபாநாயகரை அவமதித்துள்ளீர்கள், அப்போது சபாநாயகர் ஆசனத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் உங்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன் என தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச, தான் 'நடுவில் வர வேண்டாம்' எனக் கூறிய வார்த்தையை திரும்பப்பெறுவதாக குறிப்பிட்டதையடுத்து, சபை அமைதி நிலைக்கு வந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |