சட்டமா அதிபரின் பதவிக்கு ஆபத்தாக மாறிய லசந்தவின் கொலை விவகாரம்
புதிய இணைப்பு
2009ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்து சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்திற்கு நீதி கோரி, இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று பிற்பகல் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டமா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான உத்தரவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27 அன்று, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநருக்கு, லசந்த வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என்று தெரிவித்திருந்தார்.
அந்தக் கடிதத்தின்படி, குறித்த மூன்று சந்தேக நபர்களும் விடுவிக்கப்படலாம் என்னும் அச்சம் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசாங்கம், இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரையை ஆய்வு செய்வதாகக் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தையின் கொலை வழக்கு விவகாரத்தில் சட்டமா அதிபர் கடமை தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த கடிதத்தில், சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க வலியுறுத்தியுள்ளார்.
சந்தேக நபர்கள்
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகளின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட மூவரை விடுவிப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த தீர்மானம் தற்செயலானது அல்லவென்பது கடந்த வாரத்தில் இடம்பெற்ற விடயங்களில் தமக்கு தெளிவாக தெரிந்ததாக அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணைகள் தீவிரமாகவோ நம்பகத்தன்மையுடனோ இடம்பெறவில்லை.
குற்றப்பிரேரணை
எனவே, சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை முன்வைத்து அவரை பதவிநீக்கம் செய்வதே நீதிக்கான அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி என அவர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம், 27ஆம் திகதி சட்ட மா அதிபரின் கையொப்பத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
குறித்த கடிதத்தில், லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்குடன் தொடர்புடைய மூவருக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என சட்ட மாஅதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |