கோட்டாபயவை தனிமையில் சந்தித்த ரிஷாட்! பதில் கூற மறுத்த முன்னாள் ஜனாதிபதி - காலம் கடந்து வெளிவரும் விடயம்
எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று (11.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை கோவிட் உடையுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தபோது அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அங்கு வந்திருந்தார்.

கோட்டாபயவுடன் சந்திப்பு
அப்போது சபாநாயகர் என்னை அழைத்து, ‘ஜனாதிபதியை சந்தித்து ஏதாவது கூற வேண்டுமென்றால் கூறுங்கள்’ என்றார். நான் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றபோது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு இருந்தார். ‘எங்கே வந்தீர்கள்?’ என அவர் கேட்டார். சபாநாயகர் ஜனாதிபதியைச் சந்திக்கச் சொன்னதாகக் கூறினேன்.
பின்னர் ஒருவரை அழைத்து, ‘இவருடன் சென்று ஜனாதிபதியை சந்தியுங்கள்’ என மகிந்த ராஜபக்ச கூறினார். ஜனாதிபதியைச் சந்தித்து, ‘சபாநாயகர் உங்களைச் சந்திக்கச் சொன்னார்’ எனக் கூறினேன். ‘என்ன விடயம்?’ என அவர் கேட்டார். ‘என்னை ஏன் பிடித்து உள்ளே போட்டீர்கள்? சஹ்ரானுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ என நேரடியாகக் கேட்டேன். அதற்கு அவர், ‘சொல்ல முடியாது; நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன’ என்றார்.

அப்போது, ‘நாடாளுமன்றத்திலும் உங்களுக்கு சவால் விட்டிருக்கிறேன். உங்களிடத்திலும் சவால் விடுகிறேன். எனக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்’ என்றேன். ஆனால், அவர் வேறு பக்கம் பார்த்துவிட்டு எந்தப் பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்தக் காலத்தில் நான் நாடாளுமன்றத்துக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்ப்பதற்காக எனது இரண்டு பிள்ளைகளும் காத்திருப்பார்கள்.
காத்திருந்த பிள்ளைகள்
ஆனால், நேற்றைய தினம் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அப்போது அதிகாரத்தில் இருந்த ஒருவரைப் பார்ப்பதற்காக அவரது பிள்ளைகள் அறையில் காத்திருந்ததை அவதானித்தேன். அவர் யார் என்பதை நான் கூறத் தேவையில்லை. உங்களுக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இதுதான் இறை நியதி. கண்ணுக்கு முன்னால் அனைத்தும் தெரிகிறது. இன்று சஹ்ரான் தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன்.

அதேபோன்று, பேருந்தில் கைதிகளை அழைத்துச் சென்றதாகக் கூறி மூன்று மாதங்கள் என்னை சிறையில் அடைத்தார்கள். அந்தக் குற்றச்சாட்டிலிருந்தும் நீதிமன்றம் என்னை விடுவித்தது. நான் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளேன். 50க்கும் மேற்பட்ட திணைக்களங்களை வழிநடத்தியுள்ளேன். எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.