ஓமிக்ரோன் தொற்று இலங்கைக்குள் நுழையும் ஆபத்து! - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரோன் இலங்கைக்குள் நுழையாது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவர் சங்கம் இதனை கூறியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் கலாநிதி பத்மா குணரத்ன இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
எவ்வாறாயினும், புதிய திரிபு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, புதிய திரிபு நாட்டிற்குள் நுழைவதற்காக சாத்தியம் அதிகம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் நலிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மக்கள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின், எதிர்வரும் புத்தாண்டுக்குள் நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆரம்பத்தில் பொதுபோக்குவரத்து சேவையில் சிறந்த முறையில் பின்பற்றப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் தற்போது மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றது.
அரச மற்றும் தனியாருக்கு சொந்த பொதுபோக்குவரத்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்குப் பதிலாக ஆசன எண்ணிக்கைக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர்.
இந்தநிலைமை காரணமாக எதிர்வரும் நாட்களில் கோவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்ககூடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.