கோவிட் பரவுகை மீளவும் அதிகரிக்கும் அபாயம்! அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் கோவிட் பரவுகை மீளவும் அதிகரிக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்காவிட்டால், மீளவும் போராட்டங்கள் அதிகரித்து கோவிட் பரவுகை கூடும் என தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அரசாங்கம் பொறுமையுடன் பிரச்சினையை கேட்டறிந்து தீர்வு திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
குறுகிய கால அடிப்படையில் நியாயமான இடைக்கால கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.
தேசிய சம்பளக்கொள்கை, கடந்த கால சம்பள கொள்கை மீறல்கள் என்பனவற்றை கருத்திற்கொண்டு காத்திரமான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
துரித கதியில் தீர்வுத்திட்டம் வழங்கப்படாவிட்டால் வெளிநாடுகளில் மாணவர்கள் கல்வியை தொடரும் நிலை உருவாகும் எனவும்,இதனால் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.