நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : ஒன்பது நாட்களில் 39 பேர் பலி!
இம்மாதம் 20ஆம் திகதி முதல் இன்று காலை வரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் மொத்தமாக 527 விபத்துக்கள் பதிவாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துக்களில் 122 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் எனவும், 238 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் ஆகிய இருவரும் வீதிகளில் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்த அளவு விபத்துக்களும், உயிர் சேதங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், புத்தாண்டு தினத்துக்கு அடுத்த பல நாட்கள் தீர்க்கமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.