எரிபொருள் விலை அதிகரிப்பானது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்ற நிலைமை - மரிக்கார்
வேலை செய்யும் வீரன் தற்போது பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வீரனாக மாறியுள்ளதுடன் மக்கள் தற்போது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில்நேற்று எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து செய்தியாளர்களிடம் கருத்துவெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 157 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் பெட்ரோலின் விலைகளை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 117 ரூபாயாக குறைத்தது. அதன் பின்னர், இரண்டு , மூன்று ரூபாய்களால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் மிதி வண்டிகளில் நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.
பொதுஜன பெரமுனவினர் தற்போது எந்த வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வரப் போகின்றனர்.
அரசாங்கத்திடம் சரியான முகாமைத்துவம் இல்லாத காரணத்தினாலேயே அரசாங்கத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை இறக்குமதி செய்ய பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டொலர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கியிடம் 4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பபே உள்ளது. இந்த மாதம் 2.1 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது.
இதன் பின்னர் அனைத்து தேவைகளுக்கும் 1.9 பில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் இருக்கும். மறுபுறம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்று ஐரோப்பிய ஒன்றியம் யோசனையை கொண்டு வந்துள்ளது.
அப்படி நடந்தால், இலங்கையின் ஆடை உற்பத்தி தொழிற்துறையின் ஊடாக கிடைக்கும் வருவாய் மிகப் பெரிய பிரச்சினையை எதிர்நோக்கும்.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமே இலங்கையில் இருந்து அதிகளவில் ஆடை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனடிப்படையில், அரசாங்கத்தினால், தொடர்ந்தும் இந்த நாட்டை சரியாக ஆட்சி செய்ய முடியாது என்றால், அதனை செய்யக் கூடிய இளைஞர்கள் அணியிடம் நாட்டை ஒப்படைக்குமாறு கோருவதாகவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.