ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அநுரவையே பலப்படுத்தும்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்
மூன்றாவது இடத்திலுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சார்பானதாகவே அமையும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (14) நிந்தவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
" நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார். இத்தேர்தலில், ரணில் வெல்லப்போவதில்லை. சஜித் பிரேமதாசவின் வெற்றியே உறுதியாகிவிட்டது.
நாட்டின் பொருளாதாரம்
எனவே, அநுரவுக்கு வாக்களிப்பதும் வீணானதே. ரணிலுக்கு வாக்களித்தால், அநுரவுக்கு வாய்ப்பாகிவிடும். மிகக் கவனமாக சஜித்துக்கு வாக்களியுங்கள். வீழ்ந்துபோயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ஊழலில்லாத அரசாங்கம் அவசியம். சமூகங்களிடையே நல்லுறவு நிலவ, இனவாதமில்லாத ஆட்சியாளர்கள் அவசியம்.
இவையிரண்டும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் தான் சாத்தியம். ஊழல்வாதிகளையும் இனவாதிகளையும் பாதுகாக்கும் ரணிலால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
ரணிலின் இரண்டு வருட ஆட்சியில் புற்றுநோய் மருந்து மோசடிகள் இடம்பெற்றன. பாரிய விசா மோசடியில் 54,000 கோடி ரூபாவை அமைச்சர்கள் சுருட்டிக்கொண்டனர்.
சிறுபான்மை சமூகங்கள்
இவற்றை ரணிலால் தடுக்க முடியவில்லை. பிரதேச சபையைக் கூட ஆட்சி செய்த அனுபவமில்லாத அநுர ஆட்சிக்கு வந்தால், மீண்டும் வரிசை யுகமே ஏற்படும்.
பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள். சிறுபான்மைச் சமூகங்களின் ஏகதலைமைகள் எல்லாம் சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கின்றன.
இவரது தந்தையாரான ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில், ஏழைகளுக்கு வாழ்வளிக்கப்பட்டது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனவே, அவரது புதல்வரை ஜனாதிபதியாக்கி, நிம்மதியான வாழ்வுக்கு வழி சமைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |