கிவுல் ஓயா திட்டம்: 5000 ஏக்கர் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் ரிஷார்ட் பதியுதீன்
பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 5000 ஏக்கர் பெருங் காடுகளை அழித்து செய்யும் பிழையான திட்டமே கிவுல் ஓயா திட்டம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாளம்பைக்குளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மதராசாவினை நேற்று(07.02.2026) ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரஜா சக்தி நியமனம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரஜா சக்தி” என்ற ஒன்றை உருவாக்குகின்ற பொழுது நாங்கள் சந்தோசமடைந்தோம். அதன் ஊடாக அந்தந்த பிரதேசங்கள் முன்னேறும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நிர்வாகத்தைச் செய்கின்ற பொழுது அதற்கு, அந்த ஊரில் இருக்கின்ற நிர்வாகத்தோடு, அத்துடன் பள்ளி, கோயில், எந்த நிர்வாகத்தோடும் கலந்துரையாடவில்லை.

அதே போன்று, அங்கு இருக்கின்ற கிராம அபிவிருத்தி சங்கம், பெண்கள் அமைப்புக்கள் அல்லது பாடசாலை அபிவிருத்திக் குழு என எவருடனும் கலந்துரையாடாமல், அந்த ஊரில் இருக்கின்ற கல்விமான்களோடு அல்லது அந்த ஊரில் இருக்கின்ற சமூகப் பற்றாளர்களோடு கலந்துரையாடவில்லை.
அதாவது, அந்தந்த கிராமங்களிலே யார் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு போஸ்டர் போன்ற வேலைகளைச் செய்தார்களோ அவர்களைத் தலைவர்களாக நியமித்து அவர்களுக்குக் கீழே அவர்கள் விரும்புகின்ற பலரை உறுப்பினர்களாக நியமித்துச் செயல்படுகின்ற ஓர் அமைப்பாக அது மாறி இருக்கிறது.
10000 ரூபாவிற்கு மேல் பொருள் வாங்குவோருக்கு கிடைக்கவுள்ள நன்மை - இலங்கையில் அரசாங்கத்தின் புதிய திட்டம்
அந்தந்த பிரதேசங்களில் இந்த நாட்டுச் சட்டத்தின் பிரகாரம், யாப்பின் பிரகாரம் பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அந்த கட்சியைச் சாராதவர்களாக இருந்தால் இந்தக் குழுவில் கூட தலைவர்களாகவோ அல்லது உறுப்பினர்களாகவோ சேர்க்கப்படாமல் செயல்படுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு.
பேரினவாதத்தின் சதி
இந்த நாட்டிலே பேரினவாத சக்திகளுடைய கடந்த காலச் செயல்பாட்டினால் தனிநாடு கேட்டு ஒரு சமூகம் போராடிய வரலாறு இருக்கின்ற பொழுது, இந்த நாட்டில் இன மத பேதங்களுக்கு அப்பால் அநுர குமார திசாநாயக்க என்ற ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்காக யாழ்ப்பாணம் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை வாழ்கின்ற மக்கள் இன மத பேதங்களுக்கு அப்பால் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

இதற்குரிய நன்றிக்கடனாக, இன்று அந்தந்த கிராம உத்தியோகத்தர்கள் தாங்கள் விரும்பித் தெரிவு செய்த பிரதேச சபை அல்லது உள்ளூராட்சி உறுப்பினர்களைப் புறம் ஒதுக்கிவிட்டு யாரோ ஒருவர் வந்து அல்லது அந்தக் கட்சிக்கு போஸ்டர் ஒட்டினாரோ அல்லது அந்தக் கட்சிக்கு வால் பிடித்தாரோ அவரை ஊர் தலைவராக நியமிக்கின்ற ஒரு செயல்பாடு இந்த நாட்டிலே ஒரு சாபக்கேடாக நாங்கள் பார்க்கிறோம்.
75 வருட சாபக்கேடு என்று பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத ஒரு மோசமான செயலை இந்தப் பேரில் செய்து கொண்டிருப்பது அவர்களுடைய எதிர்கால அரசியலுக்கு ஒரு பேர் ஆபத்தாக அமையும் என்பதை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கிவுல் ஓயா திட்டம்
கிவுல் ஓயா திட்டம் என்பது தமிழ் மக்கள் வாழ்ந்த அந்தப் பிரதேசங்களில் பாரம்பரியமான ஒரு பெரிய காட்டை அழித்து ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். பாரம்பரியக் காடு அது. மன்னாரில் அல்லது சாளம்பைக்குளத்தில், பெரியமடுவில் அல்லது மடுவில் இருந்த காடுகள் எல்லாம் ஏற்கனவே பழைய காடுகள் அல்ல.

அதெல்லாம் 2009 சமாதானத்திற்குப் பிறகு 2012-லேயே தான் காடுகளாக்கப்பட்டது. ஆனால் அந்தக் கிவுல் ஓயா திட்டம் என்று இப்போது 5,000 ஏக்கர் காட்டை அழிக்க எடுக்கின்ற அந்தச் செயல்பாடு, அந்தக் காடுகள் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த காடுகள்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் வனவளத் திணைக்களத்திற்கு என கெசட் பண்ணப்பட்ட காணிகளை, அதாவது ஒரு பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக வேறு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரினவாத மக்களைக் கொண்டு வந்து குடியேற்ற வேண்டும் என்பதற்காகச் செய்கின்ற ஒரு பெரிய சதி.
அந்தச் சதிக்கு 5,000 ஏக்கர் பெரிய காணிகளை, பெருங்காடுகளை அழித்துச் செய்கின்ற ஒரு பிழையான திட்டம். உண்மையாக இந்த நாட்டிலே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று சிந்திக்கின்றவர்கள் இருந்தால் இதற்கு எதிராகத்தான் வழக்கு போட வேண்டுமே ஒழிய, இதற்கு எதிராகத்தான் செயல்பட வேண்டுமே ஒழிய, மன்னார் புத்தளம் பாதை 100 வருடம் பழமை வாய்ந்த பாதையை மூடுவதற்கு வழக்கு போட்டு அதிலே வெற்றி கண்டு அதில் சந்தோஷமடைவது, அதை நியாயப்படுத்திப் பேசுவது நியாயமானதல்ல. எனவே இவ்வாறான கிவுல் ஓயா திட்டம் தான் உண்மையான சுற்றுச்சூழல் பாதிப்பு. உண்மையான ஒரு பெரிய அநியாயம்.

அதுவும் இந்த நாடு, இவ்வாறான ஒரு நாட்டில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழ்கின்ற வவுனியா மாவட்டத்திலே இவ்வாறான அல்லது இந்த வன்னி மாவட்டத்தில் இவ்வாறான செயல்பாடு கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிரான செயல்பாடுகளில் எமது கட்சியும் ஒன்று சேர்ந்து செயற்படும்.
தமிழ் தரப்புகள் எங்களை இது சம்பந்தமாக அழைக்கவில்லை. அவர்கள் எடுக்கின்ற இந்த நடவடிக்கைகளுக்கு நாங்களும் பூரண ஆதரவை எதிர்காலத்தில் வழங்கிச் செயல்படுவோம் என உறுதியளித்துள்ளார்.