நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள் - மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை (09.02.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலை மாற்றம்
தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடிதங்கள் மற்றும் பதிவுத் தபால்
• சாதாரண கடிதங்கள்: இதுவரை 20 கிராம் ஆக குறிப்பிடப்பட்ட கடிதங்களுக்கான அடிப்படை நிறை வகுப்பு தற்போது 30 கிராம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டணம் 70 ரூபா ஆகும்.
• பதிவுத் தபால் (Registration): கடிதங்களைப் பதிவு செய்வதற்கான மேலதிக கட்டணம் 60 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ரூ. 60 + 70)
• அரச சேவைகள்: அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களினால் அனுப்பப்படும் பதிவுத் தபால் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) ரூ. 130
• கொழும்பு நகர எல்லை: கொழும்பு 1 முதல் 15 வரையான நகர வலயங்களுக்குள் மத்திய தபால் பரிமாற்றகத்தினூடாக விநியோகிக்கப்படும் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) 50 ரூபா விசேட கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏனைய தபால் சேவைகள்
• தபால் அட்டை (Postcard): ஒரு தபால் அட்டையின் புதிய கட்டணம் ரூ. 40 ஆகும்.
• தபால் அடையாள அட்டை: தபால் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான சாதாரண கட்டணம் ரூ. 50 ஆகவும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் ரூ. 200 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
பொதி மற்றும் கூரியர்: 250 கிராம் வரையிலான சாதாரண பொதிகளுக்கு ரூ. 150, ‘SL Post Courier’ சேவை ஊடாக அனுப்பப்படும் அதே எடையுள்ள பொதிகளுக்கு ரூ. 200 அறவிடப்படும்.
• அச்சுப் பொருட்கள்: 30 கிராம் வரையிலான அச்சுப் பொருட்கள் அல்லது திறந்த பொதிகளுக்கு ரூ. 45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
• பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள்: தபால் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளைத் தபாலில் அனுப்புவதற்கு (60 கிராம் வரை) ரூ. 40 அறவிடப்படும்.
பணம் மற்றும் தந்தி சேவைகள்
• தந்தி (Telemail): தந்தி சேவைக்கான ஆரம்பக் கட்டணம் (முதல் 10 சொற்களுக்கு) ரூ. 50 ஆகவும், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூ. 5 அறவிடப்படும்.
• பண அனுப்பல் கட்டணம் (Money Orders): தபால் நிலையங்கள் ஊடாக அனுப்பப்படும் பண விநியோகங்களுக்கான (PMT) தரகுப் பணம் (Commission) அதன் பெறுமதிக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ. 2,000 வரையான பணத்திற்கு ஒவ்வொரு ரூ. 100 இற்கும் ரூ. 2 வீதம் அறவிடப்படும்.
அனைத்து தபால் நிலையங்களும் இந்தப் புதிய கட்டண முறைக்கேற்ப செயற்படுமாறும், பொதுமக்கள் இது குறித்துத் தெளிவுபெறுமாறும் அனைத்து தபால் நிலையங்கள் உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றுநிருபம் மூலம் தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டப்ளியூ.எம்.ஆர்.பீ.சத்குமாரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளை முதல் அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தும் போது புதிய கட்டணங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு அஞ்சல் துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |