முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,500 ஏக்கர் வரையான நெற்செய்கை அழிவு: ஆர்.பரணிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள 1,518 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆர்.பரணிகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி மற்றும் 2ஆம் திகதிகளில் பெய்த மழைக் காரணமாகவே இவ்வாறு நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பெரும்போக நெற்செய்கை 22 ஆயிரம் ஹெட்டயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபந்த நோய்த் தாக்கம்
பல சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள், விவசாய செய்கையினை மேற்கொண்டுள்ளார்கள் எரிபந்த நோய்த் தாக்கம் காரணமாகவும் விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 15 மூடைகள் என்ற அளவில்தான் காணப்பட்டது.
இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த 1,518 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுசுட்டானில் 530 ஏக்கரும்,புதுக்குடியிருப்பில் 380 ஏக்கரும் முள்ளியவளையில் 318 ஏக்கரும் உள்ளிட்ட மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய், ஒலுமடு, குமுழமுனை, உடையார்கட்டு, போன்ற இடங்களிலுமாக 1,518 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட மதீப்பீட்டு அறிக்கையில் கிடைக்கப்பெற்றுள்ளது.
காப்புறுதி நடவடிக்கைகள்
பாதிப்புக்கள் தொடர்பிலான விபரங்கள் அடுத்த கட்டமாக இழப்பீட்டுக்கான மதிப்பீடுகளை மதிப்பிடும் தலைவரான பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக அழிவுகள் முழுமையாக மதிப்பீடு செய்து அவர்களுக்கான முழுமையான
இழப்பீட்டினை பெற்றுக்கொள்வதற்கான காப்புறுதி நடவடிக்கைகளை
முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.