எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி: ஷெல்டன் பெர்னாண்டோ
நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி பதிவாகி வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய எரிபொருள் உரிமம் அல்லது கியூ.ஆர் அட்டை முறையில் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
கியூ.ஆர் அட்டை நடைமுறைப்படுத்த முன்னதாக வாராந்தம் 12 முதல் 15 பவுஸர்களில் எரிபொருள் கிடைக்கப் பெற்றது எனவும் தற்பொழுது வாராந்தம் 4 முதல் 5 பவுஸர்களில் எரிபொருள் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல் |
எதிர்கொள்ளும் தாக்கங்கள்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 998 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இதனால் பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வரையறுக்கப்பட்ட அடிப்படையில் எரிபொருள் கிடைத்தாலும், பணியாளர் சம்பளம், நீர், மின்சாரக் கட்டணங்கள், பவுஸர் சாரதி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளில் மாற்றமில்லை என அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எண்ணெய் நிறுவனம்
இதேவேளை, விலையை அதிகரித்தேனும் போதியளவு எரிபொருள் விநியோகிக்குமாறு பொதுமக்கள் கோருவதாக இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.