பதிலடி மோசமாக இருக்கும்! தலிபான்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
தமது சொத்துக்களை தாக்கினால், பதிலடி மோசமாக இருக்கும் என தலிபான்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல, பயங்கரவாதத்தை ஒழிக்கவே தாம் இதுவரை காலம் அமெரிக்க ராணுவத்தை பாதுகாப்பில் ஈடுபடுத்தியிருந்தோம்.
அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட ஆப்கான் படைகள், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடாமல் இருந்தனர்.ஆப்கான் ராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நிலையில், ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளை மீளப் பெறும் முடிவில் உறுதி.ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்.
இதன்படி, தலிபான்களை ஒடுக்க ஆப்கான் இராணுவத்திற்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவிகளை வழங்கியது. இந்த நிலையில், தலிபான்களுக்கு எதிராக போராடாமலேயே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாக சரணடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை மீள அழைத்த தமது தீர்மானம் மிக சரியானது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை மீள பெறுவதற்கான சரியான தருணம் அங்கு இருக்கவில்லையென்பதை 20 ஆண்டுகளின் பின்னர் தாம் கற்றுக்கொண்டோம். இதனாலேயே அமெரிக்க படைகள் தொடர்ந்தும் அங்கிருந்ததாகவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,காபூலில் தாம் கண்ட சில நெருக்கடியான காட்சிகள் மிகுந்த வேதனைக்குரியவை எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்தும் நெருக்கடி நிலவுவதுடன், விமான நிலையத்திற்கு வருவோரை தலிபான்கள் திருப்பியனுப்புவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 150 இராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லக்கூடிய அமெரிக்க விமானப்படையினரின் C-17 விமானத்தில் 640 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகவும், தமது ஆட்சி மீது முழு நம்பிக்கை வைத்து பணிக்குத் திரும்புமாறும் தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த தமது படையை அமெரிக்க மீளப் பெற்றுக் கொண்டதையடுத்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.