அரசாங்கம் தெளிவான கொள்கையை வெளிப்படுத்த வேண்டும்! - விஜித ஹேரத் கோரிக்கை
இரசாயன பசளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் முடிவை அரசாங்கம் திரும்பப் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், நாட்டை ஏமாற்றாமல் தனது தெளிவான கொள்கையை வெளிப்படுத்துமாறு, அரசாங்கத்திடம் தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நைட்ரஜன் இரசாயன உரங்கள் மற்றும் பொஸ்பேட்டிக் இறக்குமதிக்கு 2238/45 என்ற வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை கரிம பசளைகள் அல்ல. இரசாயன பசளைகளாகும் என்று அவர் குறிப்பிட்டார். இரசாயன பசளையை இறக்குமதி செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக நிதி அமைச்சகம் இன்று மற்றொரு வர்த்தமானி அறிவிப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதன் பொருள் இரசாயன பசளையை தடை செய்வதற்கான வர்த்தமானியை அரசாங்கம் இரண்டாவது முறையாக மாற்றியமைத்துள்ளது என்பதாகும் என ஹேரத் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விவசாயிகளை இக்கட்டான நிலைக்கு தள்ளாமல் அரசாங்கம் தனது கொள்கையை தெளிவாக கூற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். "விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம்.
அவர்களை ஏமாற்றி பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. அப்படியானால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று அவர் கூறினார்.
17 வீதம் நைட்ரஜனுடன் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கரிம பசளையை இறக்குமதி செய்வதாகக் கூறியுள்ள அரசாங்கம், சீனாவிலிருந்து நகர்ப்புறக் கழிவுகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
சீனாவில் இருந்து எடுக்கப்பட்ட கரிம பசளையின் மாதிரியில் அதில் எர்வினியா நோய்க்கிருமி இருப்பதாக தெரியவந்துள்ளது, மேலும் இது பெரும்பாலான காய்கறி செய்கை மற்றும் குறிப்பாக உருளைக்கிழங்கு செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்.