தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நாடு திரும்பல்: ஆளுநருடன் கலந்துரையாடல்
இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன், இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மீள்குடியேற்ற ஒழுங்குமுறை
ஆனால் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியமையும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகப்பொறுப்புடன் கையாண்டமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அது வரவேற்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற ஒழுங்குமுறை தொடர்பாக விசேட அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டிய முக்கியத்துவம் கலந்துரையாடப்பட்டது.
இதற்காக ஒஃபர் சிலோன் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமும் மாகாண மட்ட கலந்துரையாடலில் பெறப்பட்ட விடயங்கள் தொடர்பான ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு ஓர் ஆவணமாகத் தயாரிக்கப்பட்டு அரச உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துக்கள் பெறப்பட்டு உரிய முறையில் அமைச்சரவைக்கு ஊடாக ஜனாதிபதியின் பார்வைக்கு சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மீள் திரும்புகின்ற மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தின் சகலநிலை அதிகாரிகளையும் உள்ளடக்கி மக்களின் தேவைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், மாகாணமட்ட உயர் அதிகாரிகளை தமிழ் நாட்டிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக அவதானிப்புக்களை மேற்கொள்வதுடன் அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பவை தொடர்பாகவும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மீள்குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான விசேட தேவைகளை எவ்வாறு விரைவாகப் பெற்றுக் கொடுக்கலாம் என்பதையும் நிலைத்த மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்தையும் கட்டி எழுப்புதலின் அவசியம் தொடர்பாக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவைகளை தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.



விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
