புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டம்
புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் பணிக்காக புதிதாக நியமிக்கப்பட்ட, அமையா அமைய ஊழியர்களினால், தங்களுக்குரிய சம்பளத்தை பெற்றுத் தருமாறு கோரி, கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று(16) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு, புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன பிரதான அலுவலக நுழைவாயிலை மூடி, இந்த கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதிகாரிகளிடம் கோரிக்கை
இவர்கள் வேலைக்காக அமர்த்தப்பட்டு, ஒரு வருடமாகியும் இன்னும் சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக அவற்றை பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், அவர்களால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்துக்கு, புல்மோட்டை பொலிஸ் பொறுப்பு அதிகாரி வருகை தந்து, பிரதான நுழைவாயிலை திறந்து, பணிப் பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிய போதும், தொடர்ச்சியாக, தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.