பருத்தித்துறை பிரதேச சபையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்ககளை தடை செய்வது என்றும், அரசால் கொண்டு வரப்படவிருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் கொண்டு வருவதை நிறுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்று(24.02.2026) பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இதன்போது, சபையில் தவிசாளர் தனது தலைமை உரையில் அனைத்து உறுப்பினர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், மக்களுக்கு தரமான சேவையை வழங்கவேண்டும் என கோரிக்கையொன்றை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு சபை முன்மொழிவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அமைந்துள்ள மந்திகை பகுதியில், ஒரு பாடசாலைக்கு மிக அருகிலும் மக்கள் குடியிருப்புகளின் மத்தியிலும், பிரதான வீதியோரத்திலும் அமைந்துள்ள ஏற்கனவே இயங்கி வந்த சவப்பெட்டி கடை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த கடைக்கு கறுப்பு கண்ணாடி பொருத்தி, சவப்பெட்டிகள் விற்பனை செய்வதற்கு மட்டும் நிபந்தனையுடன் அனுமதி வழங்கவும், இறந்த உடல்களை குளிரூட்டுதல் அல்லது அங்கு வைத்து பதப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைத் தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆறாம் வட்டாரத்தில் குறித்த இடத்தை மாகாண சபை நிதியின் மூலம் சீரமைப்பதற்கும் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், மக்களால் சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவிசாளர் சபைக்கு அறிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டம் நீக்குவதற்கான முக்கிய தீர்மானம்
இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், புதிதாக கொண்டுவரப்படவுள்ள “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும்” சட்ட முன்வரைவைக் திருப்பி பெறக் கோரியும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு சபை அமர்வில் கலந்துகொண்ட 19 உறுப்பினர்களில் 15 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மேலும், ஒருவரும் சபை அமர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உட்பட சிறுவர்கள் புகை மற்றும் மதுப் பழக்கங்களுக்கு உட்படுகின்றனர் என்ற கவலைவும் முன்வைக்கப்பட்டது.
இராணுவம் தமது பாதுகாப்பு கடமைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும், பொதுமக்களுக்கான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், இதன்போது பல்வேறு பிற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட அதே சமயத்தில், நிதிக்குழுவால் அனுமதிக்கப்பட்ட பல நிதி நடவடிக்கைகளுக்கும் சபையின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
