சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியினை கோவிட் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான விசேட கோவிட் செயலணிக்கூட்டம் இன்று(07) நடைபெற்றுள்ளது.
இதன்போது கோவிட் தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக நாடு படுமோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாநகரை அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதார நடைமுறைகளைக் கடுமையாக்கவும் அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறைகளைப்பேணாத வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பு அமைப்புகளை மீளபுனரமைத்து செயற்பாடுகளை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. பொலிஸார், சுகாதார பிரிவினர் முன்னெடுக்கும் கோவிட் தடுப்பு செயற்பாடுகளுக்கு மாநகரசபையின் முழுமையான ஆதரவினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த
கூட்டத்தில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய
அதிகாரி கே.கிரிசுதன்,மாநகரசபையின் பிரதி ஆணையாளர் சிவராஜா மற்றும்
பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள், மட்டக்களப்பு தலைமையக
பொலிஸார் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.