கொரோனாவினால் மரணமாவோரின் உடலங்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம்!
கொரோனாவினால் மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்யலாமா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நிபுணர் குழுக்கள் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டிருப்பதே இதற்கான காரணமாகும்.
கடந்த வார இறுதியில் சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த இரண்டு முரண்பட்ட கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் விரைவில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதித்துறை மருத்துவ அதிகாரி மற்றும் தடயவியல் நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சன்ன பெரேரா தலைமையிலான குழுவினர், கடுமையான வழிகாட்டுதலின் கீழ் உளங்களைத் தகனம் செய்வதே வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பான வழி என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
மூத்த பேராசிரியர் பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு, தகனம் மற்றும் அடக்கம் இரண்டையும் கடுமையான வழிகாட்டுதலின் கீழ் அனுமதிக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டுள்ளது.
இந்த குழுவின் பரிந்துரை வரைவு சமூக ஊடகங்களிலும் பதிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரி, இலங்கை மருத்துவ சங்கம் ஆகியவை தற்போது கிடைக்கக்கூடிய அறிவியல் தகவல்களின் அடிப்படையில் அடக்கத்தை அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளன.