வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்?
அமெரிக்க டொலர்களில் வரி செலுத்த ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலும் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் அமெரிக்க டொலரில் வாகனங்களை வாங்கி, அந்த வாகனத்திற்கு இலங்கையில் செலுத்த வேண்டிய வரியை அமெரிக்க டொலரில் செலுத்த ஒப்புக்கொள்பவர்கள் எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த செயன்முறை குறித்து மத்திய வங்கி கவனமெடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டிசம்பர் மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
டிசம்பர் வரை வாகனங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், எனினும் டிசம்பர் மாதத்திற்குள் இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது சாத்தியமில்லை எனவும், அது பொருளாதாரத்திற்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், வாகன இறக்குமதி வரம்பை படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மேலும் கூறியுள்ளார்.