மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கோவிட் செயலணி கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர், அவ்வாறே திங்கட்கிழமை 20 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இந்த வகையினை பார்க்கும்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றது. சிலவேளை குறைவாக இருக்கின்றது. எனவே இதனை ஆராய்ந்து பல முடிவுகளை எடுத்துள்ளோம்.
கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த தீர்மானமான அத்தியாவசியமான மருந்தகம், பலசரக்கு கடைகள், சுப்பமாக்கட்கள் போன்றவை இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அனைத்து கடைகளும் மாலை 6 மணியுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உள்நுழையும் பகுதியான எல்லையில் 7 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வீதிச்சோதனை சாவடிகள் அமைத்து இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
அத்தியாவசிய மற்றும் வைத்திய சேவைக்காகச் செல்பவர்களை விடுத்து ஏனையவர்கள் மாவட்டத்தை விட்டுச் செல்வதை தடைசெய்வதாகவும், மாவட்டத்துக்குள் நுழைபவர்கள் சோதனைச் சாவடியில் பதிவு செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அனுமதிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவைகளுக்கு இன்றில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், தனியர் போக்குவரத்து அம்பாறைக்கும் திருகோணமலைக்கும் இடையில் ஒரு போக்குவரத்து சேவை மட்டும் இடம்பெறும்.
அந்த சேவை கூட இடையில் நிறுத்தாமல் அம்பாறையிலிருந்து நேரடியாகத் திருகோணமலைக்கு மட்டும் இடம்பெறும்.
பெரியகல்லாறு ,காத்தான்குடி, கரடியனாறு, வைத்தியசாலைகள் கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக இயங்கிவருகின்றது.
இங்கு சுமார் 400 நோயாளர்களை மாத்திரம் தங்கவைத்து சிகிச்சையளிக்க முடியும். இருந்தபோதும் மேலும் 500 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை தேவையாகவுள்ளது.
எனவே அரசாங்கம் தொற்றாளர்களை பராமரிக்கும் ஆயிரம் கட்டில்கள் கொண்ட ஒரு வைத்தியசாலையை உருவாக்கும் திட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட விடுதியைத் தற்காலிகமாக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றவேண்டியது தொடர்பாக அந்த இடத்துக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு தீர்மானிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு அநாவசியமாக வெளியே வரவேண்டாம். மட்டக்களப்பு
மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாகச் செல்வதைத் தடுத்துக்
கொள்ளுமாறும், சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அவதானமாகச்
செயற்படுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.