ஈரானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஈரான்
ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அத்துடன், இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா அணுசக்தி முகவரகத்தால் ஈரானுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.
உடனடி நடவடிக்கை
ஈரானின் 'Fordow', 'Natanz' மற்றும் 'Isfahan' ஆகிய முக்கிய அணுசக்தி மையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அணுசக்தி மையங்களை ஆய்வு செய்வதற்கான பாதுகாப்பான சூழல் இல்லையெனத் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வல்லரசு நாடுகள் வீட்டோ (Veto) அதிகாரத்தைக் கொண்டுள்ளதால், ஈரானுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுப்பது கடினம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.