மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் (Photos)
மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குக் கடந்த மூன்று கிழமையாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இன்று மண்ணெண்ணெய் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் வருகைதந்த நிலையில், இன்றைய தினமும் மண்ணெண்ணெய் வரவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியை மறித்து போராட்டம்
மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் 500ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாகப் போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியிருந்தது.
குறிப்பாக மஸ்கெலியா- ஹட்டன் , மஸ்கெலியா – நல்லதண்ணி போன்ற பிரதான வீதியினுடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமாகியிருந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.
இதனையடுத்து, நாளை அல்லது எதிர்வரும் நாட்களில் அனைவருக்கும் மண்ணெண்ணெய் கிடைக்க தாங்கள் ஏற்பாடுகளைச் செய்து தருவதாக எரிபொருள் நிலைய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




