சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்குமாறு திருகோணமலை மக்களிடம் கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 20ஆம் திகதிக்கு பின்னர் இன்று வரையான காலப்பகுதியில் புதிதாக 104 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான திருகோணமலையில் 58 பேருக்கும், மூதூரில் 28 பேருக்கும் கிண்ணியாவில் 9 பேருக்கும், தம்பலகாமத்தில் 5 பேருக்கும், சேருவிலயில் 3 பேருக்கும் மற்றும் கோமரங்கடவெல பிரிவில் ஒருவரும் இதில் அடங்குவர்.
அத்துடன் தொற்றாளர்களோடு தொடர்புபட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய பிரதேச செயலகம் மூலம் அரசாங்கத்தின் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் மாவட்டத்தில் கொவிட் தொற்று மேலும் பரவா வண்ணம் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும்.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மூலம் டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறமுடியும்.
எனவே பொதுமக்கள் குறித்த விடயங்களை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.