புதுக்குடியிருப்பில் தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் தர கோரிக்கை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தபாலகத்திற்குரிய நிரந்தர கட்டடத்தை அமைத்து அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது விடின் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு தபால் நிலையத்திற்கு சொந்தமான அரச காணியிருந்தும் 13 வருடங்கள் கடந்தும் இதுவரை எதுவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளவில்லை.
இருப்பினும் இன்றையதினம் (06.12.2025) காலை தபால் ஊழியர்கள் குறித்த காணியினை துப்பரவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, குறித்த பணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேசசபை உறுப்பினர், "புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வீதியில் அஞ்சல் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி யுத்தத்திற்கு பின்னர் 13 வருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் எவ்வித கட்டுமான பணிகளும் இடம்பெறாமல் இருக்கிறது.
அதனால் காணி பற்றையாக காணப்படுவதோடு இக்காணிக்கு அருகாமை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாய்க்கால் சீராக புனரமைக்கப்படாமல் இருக்கின்றது.
துப்பரவு நடவடிக்கைகள்
என மக்கள் பிரதேசசபைக்கு முறைப்பாடு வழங்கி இருந்தார்கள் அதற்கமைய தபாலக ஊழியர்கள் அஞ்சல் திணைக்களத்திற்குரிய காணியினை இன்றையதினம் துப்பரவு செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு தபாலகமானது 9 இடங்களில் இடமாறியிருக்கின்றது.

புதுக்குடியிருப்பு தபாலகம் உப தபாலகமாக இருந்து 2006 ஆம் ஆண்டு தபாலகமாக மாற்றம் பெற்றிருந்தது. இதன் கீழ் ஆனந்தபுரம், உடையார்கட்டு, விசுவமடு உப தபாலகங்கள் இயங்கி வருகின்றது. ஆனால் புதுக்குடியிருப்பு தபாலகம் வாடகை கட்டடத்திலேயே தற்போதும் இயங்கி வருகின்றது.
இதனால் தபாலகம் அடிக்கடி இடம்மாற வேண்டி இருக்கும் .இவ்வாறு இடம் மாறுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு இவ்வருடம் நான் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றேன்.
அதற்கு அடுத்த வருடத்திற்குள் கட்டிடம் அமைத்து தருவதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர கட்டடம் ஒன்று அமைத்து கொடுப்பதன் ஊடாக மக்களுக்கும் , வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இடையூறு இருக்காது.
அடுத்த வருடம் தபாலகத்திற்குரிய நிரந்தர கட்டடங்களை அமைத்து அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது விட்டால் மக்களோடு இணைந்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும்" என தெரிவித்திருந்தார்.





