எரிவாயுவை பெறுவதில் சிக்கல்: மன்னார் தீவு பகுதி மக்கள் அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை (Photo)
மன்னார் மாவட்டத்திற்கு விநியோகிக்கக் கொண்டு வரப்படுகின்ற லிற்றோ எரிவாயு மன்னார் தீவுப் பகுதிக்குக் கொண்டு வந்து விநியோகிக்கப்படாமையால் தீவு பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் லிற்றோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக மன்னார் மாவட்டத்திற்கு என கொண்டு வரப்படும் லிற்றோ எரிவாயு மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள லிற்றோ எரிவாயு களஞ்சியசாலையில் வைத்து மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மேலும் நேற்றைய தினம் காலை முதல் மக்கள் குறித்த களஞ்சியசாலைக்கு முன் நீண்ட நேரம் எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள நின்ற போதும் தனியாருக்கு விற்பனை செய்ய வாகனங்களில் ஏற்றிய போது மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைமன்னார் முதல் மன்னார் நகரப் பகுதியில் உள்ள மக்கள் குறித்த எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த களஞ்சியசாலையில் விநியோகிக்கப்படும் 12.5 KG லிற்றோ எரிவாயுவை 2770 ரூபாவிற்கு கொள்வனவு செய்து மன்னார் பகுதியில் 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை விற்பனை செய்வதாக தெரியவருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்திற்கு எனக் கொண்டு வரப்படும் லிற்றோ எரிவாயு மன்னார் பகுதியில் உள்ள விற்பனை நிலையங்களுக்கும் வழங்கி நிர்ணய விலைக்கு விற்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்விடயத்தில் மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் துரித நடவடிக்கை எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு என கொண்டு
வரப்பட்டு, உயிலங்குளம் பகுதியில் உள்ள லிற்றோ எரிவாயு களஞ்சியசாலையில்
வைத்து விநியோகிக்கப்படும் எரிவாயுவை மன்னார் தீவு பகுதிக்குக் கொண்டு வந்து
உரிய வர்த்தக நிலையங்கள் ஊடாக நிர்ணய விலையில் வழங்க நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
