குடியுரிமை கொடுங்கள்!பதக்கங்கள் கொண்டு வருகிறேன்: அகதியொருவர் அவுஸ்திரேலியாவிடம் விடுத்துள்ள கோரிக்கை
ஆப்கானிய அகதியான ஹூசைனி தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர் என்பதால் அவரால் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க அவுஸ்திரேலியாவிலிருந்து சீனாவுக்கு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல முறை பட்டம் வென்ற அவுஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான அல் ஹூசைனி சமீபத்தில் 57கிலோ ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார்.
அவுஸ்திரேலியாவின் சிறந்த மல்யுத்த வீரர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியாது. 2013ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹூசைனி அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்.
இவர் அவுஸ்திரேலியாவில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தாலும், அவர் தற்காலிக விசாவிலேயே இருக்கும் நிலை தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபானால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஹசாரா இனக்குழுவைச் சேர்ந்தவர் ஹூசைனி.
ஹூசைனியின் சகோதரர் தாலிபானால் கடத்தி, சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். “எனது நாடு பாதுகாப்பானதல்ல. எங்கே பார்த்தாலும் தாலிபான். அவர்கள் பலரையும் கொல்கின்றனர். ஹசாரா மக்களைக் கொல்கின்றனர், ஷியா முஸ்லீம்களை கொல்கின்றனர்.
” ஆப்கானிஸ்தானில் உள்ள எனது தாயார் நான் எப்போது வருகிறேன் எனக் கேட்பதாகக் கூறும் ஹூசைனி, “எப்போது என எனக்குத் தெரியவில்லை,” எனக் கூறியதாக கலங்குகிறார். அவரது கோரிக்கை ஒன்று மட்டுமே, அவருக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
“அவுஸ்திரேலியா அரசு எனக்கு குடியுரிமை
வழங்கினால்… நான் அவுஸ்திரேலியாவுக்கு பதக்கங்களைக் கொண்டு வருகிறேன்,” என
ஹூசைனி தி கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.