மேல் மாகாணத்திற்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு கோரிக்கை
தற்போதைய சூழ்நிலையில் அரச திணைக்களங்களைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் மேல் மாகணத்திற்கு சென்று வருகின்றனர்.
அவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு வவுனியா பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் அமைந்துள்ள பல்வேறு அரச திணைக்களங்களை சேர்ந்த அலுவலர்கள் பலர் மேல் மாகாணத்திற்கு சென்று வருகின்றார்கள்.
தொடர்ந்து இச்செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. அதனை நாம் ஒவ்வொருவராக கவனிப்பது மிகவும் கடினம்.
எனவே திணைக்களங்களின் தலைவர்கள் இந்தவிடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்குமாறும் அவர்களிற்கான விடுமுறைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
அவ்வாறு சென்று வருபவர்கள் தனிமைப்படுத்தல் பிரதேசத்திற்குச் செல்லவில்லை என்று சுகாதார பிரிவினரினால் சிபாரிசு செய்யப்பட்ட கடிதம் ஒன்றினை பெற்றுவர வேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை வெளி மாகாணங்களிலிருந்து கிராமங்களிற்கு வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதுடன் அவர்களை இனம்காண வேண்டிய தேவையும் இருக்கிறது.
இதுதொடர்பாக பொதுமக்களே சுகாதார பிரிவினருக்கு அதிகமான தகவல்களை வழங்குகின்றனர்.
உண்மையில் கிராம சேவகர்களே இந்த விடயத்தைக் கையாள வேண்டும், கிராமங்கள் பற்றி அவர்களிற்கே நன்கு தெரியும். அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களிற்குப் பிரதேச செயலாளர்கள் சென்றிருக்கின்றனர்.
சுகாதார பரிசோதகர்களும் சென்று எமக்கான ஒத்துழைப்புகளை வழங்கிவரும் நிலையில், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இந்த விடயத்தில் எமக்கு ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை.
எனவே நாம் ஒரு முறைமையை கடைப்பிடிக்கவேண்டுமென்று தெரிவித்துள்ளார்.


