ஸார்ப் நிறுவனத்துடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்ட ஜெனிவா நாட்டின் பிரதிநிதிகள்
கிளிநொச்சி - முகமாலை பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த ஜெனிவா நாட்டின் பிரதிநிதிகள் ஸார்ப் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஸார்ப் எனும் அரச சார்பற்ற நிறுவனம் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெனிவா நாட்டு நடவடிக்கை முகாமையாளர் ஒசா மற்றும் கெலன் ஆகியோர் முகமாலைப் பகுதிக்குச் சென்று ஸார்ப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் தளத்தை மேற்பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது கண்ணிவெடி அகற்றப்பட்டுக் கையளிக்கப்பட்ட பிரதேசங்கள், தற்போது வேலை நடைபெறும் பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள், தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வு பெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவிக்கையில்,
ஸார்ப் நிறுவனமானது 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 அக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதியிலும் வெடிபொருட்கள் அகற்றும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள பதினேழு இலட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று எண்பத்தைந்து சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து இருபத்தொன்பதாயிரத்து எழுநூற்று அறுபத்து மூன்று அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.




