குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்:விரும்பிய விலைக்கு விற்கும் சந்தர்ப்பம்
உள்நாட்டில் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆக கூடிய சில்லறை விலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க (Shantha Dissanayake) இந்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில், உள்நாட்டில் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட கூடிய விலைகளுக்கு விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ, காட்சிப்படுத்தவோ கூடாது என அறிவித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2090/46 என்ற வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில், வர்த்தகர்கள் உள்நாட்டில் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தமது விருப்பத்திற்கு அமைய விற்பனை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் அரசாங்கம் கடந்த காலத்தில் அரிசிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. இதன் காரணமாக நாட்டில் அரிசிகளின் விலைகளை மிகப் பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டது.