சஹ்ரான் காசிமுடன் தொடர்பை பேணிவந்த 52 பேரிடம் வாக்குமூலம் பதிவு
மட்டக்களப்பு -காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் காசிமுடன் தொடர்பைப் பேணி வந்ததாக அடையாளம் காணப்பட்ட 52 பேருக்கு எதிரான வாக்கு மூலங்களைப் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் வீடு வீடாகச் சென்று பதிவு செய்து வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் , பயிற்சி முகாம் மற்றும் அதனுடன் இனைந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய காத்தான்குடியைச் சேர்ந்த ஆண், பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்டோரைக் கடந்த காலத்தில் பாதுகாப்பு படைத்துறையைச் சேர்ந்த பொலிஸார், சிஐடியினர், பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் 5 பேர் வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்து இருந்தபோதும் தொடர்ந்து பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொண்டுவரும் விசாரணையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் காசிமுடன் முகநூல் மற்றும் தொலைபேசி, பேன்றவற்றின் ஊடாக தொடர்புகளைப் பேணிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரை அடையாளம் கண்டுகொண்டனர்.
இந்த நிலையில் இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை நேற்று(11) பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் ஆரம்பித்து வீடுவீடாக சென்று அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.