வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்:இலங்கைக்குள் நுழைந்துள்ள தாழமுக்கம் (video)
தென்மேற்கு வங்கான விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்க நிலை நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள நிலையில், எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, கடலுக்குச் செல்லும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் மக்களுக்கும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே 160கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது அடுத்த சில மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்து, 24 மணிநேரத்தில் நாட்டைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக மழை வீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் விபரம்
இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இலங்கையின் நிலப்பரப்பை விட்டு வடக்கு திசையில் விலகிப்போன தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் கடலில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் இலங்கையை ஊடறுத்துப் பயணிக்கக் கூடிய வகையில் தனது நகர்வை ஆரம்பித்துள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியிருந்தது.

உயரழுத்தம் யாழ்ப்பாணக் கடல் எல்லைவரை நீடிப்பதால், அம்பாறைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் பெரும்பாலும் திருகோணமலை வழியே இன்று ஞாயிறன்று கரையைக்கடந்து மத்திய இலங்கை ஊடாக மேற்கிலே அரபிக் கடலில் சென்று பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள் காலை வரை வடக்கு, கிழக்கில் பரவலாக குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாழமுக்கம் இலங்கையை ஊடறுத்து பயணிக்கும்போது, மேகக்குவிப்பு மலையகம், கொழும்பை அண்டிய பகுதிகளை நோக்கியே அமைய வாய்ப்புள்ளது.
இதனால் மேல் மாகாணம், மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையான அதீத மழைவீழ்ச்சி சில மணிநேரங்களிலேயே பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் மலையகத்தில் சில இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படவும் ஏதுவான நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் தற்போது கொழும்பு உட்பட பல இடங்களில் அடை மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய அதிக மழைவீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் நாடளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கு வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மக்கள் தமது அன்றாட வேலைகளில் ஈடுப்படும் போது மழை மற்றும் மின்னல் தாக்கங்களினால் எற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார விஜய் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங்.. எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது தெரியுமா? Cineulagam