முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பெண் போராளிகளின் சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
“இங்கு ஒன்றோ அல்லது இரண்டோ இல்லை, அதைவிடக் கூடுதலாகக் காண முடிந்தது” என்று வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த புதை குழி காணப்பட்டவுடன் கொக்கிளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்குத் தகவல் தெரிவித்ததாகவும், உடனடியாக தான் அங்குச் சென்றதாகவும் துரைராசா ரவிகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கொக்கிளாய் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எலும்புக்கூடுகள்
மேலும், நீதிமன்ற உத்தரவை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு கூறுகிறது. அந்த இடத்தை பார்வையிட நான் அனுமதிக்கப்பட்டேன். அங்கு உடைகளின் சில பகுதிகளும், எலும்புக்கூடுகளும் காணப்பட்டன.
உடைகளில் பெண்களின் ஆடைகளும் இருந்தன. அவற்றைக் காணும்போது அவை விடுதலைப் புலிகளுடையதாக இருக்கக் கூடும் என எனக்குத் தோன்றுகிறது.
2-3 மீட்டர் அளவிலான பகுதியில் அந்த உடல் எச்சங்கள் காணப்பட்டன. அந்த எலும்புக்கூடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டமை போலத் தெரிகிறது.
இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் முல்லைத்தீவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனினும் இந்த இடம் ‘மாவீரர் துயிலும் இல்லம் இல்லை’ என்பதை உறுதியாகக் கூற முடியும்.
ஒருவரைக் கூட கண்டுபிடிக்கவில்லை
இந்த பகுதியிலிருந்த மக்கள் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரம் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் 2011ஆம் ஆண்டே மீள் குடியமர்த்தப்பட்டனர். மேலதிகமாக தோண்டப்படும் போதும் கூடுதல் உடல் எச்சங்கள் கிடைக்கலாம்.
மிகவும் கொடூரமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி இரத்தக்களறியுடன் முடிவடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரச படையினரிடம் சரணடைந்தனர், அல்லது கையளிக்கப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
அவர்களைக் கண்டுபிடிக்க ஒரு அலுவலகம் 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற தீர்மானம் ஒன்றின் மூலம் அமைக்கப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் அந்த அலுவலகம் இதுவரை அவ்வகையில் காணாமல்போன ஒருவரைக் கூட கண்டுபிடிக்கவில்லை.
அந்த அலுவலகமும் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளரின் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
போர்க் குற்றங்கள்
ஜூன் மாதம் 21ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான நிலை குறித்த தனது வாய்மொழியான அறிக்கையில் பிரதி ஆணையாளர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தைக் குறை கூறியிருந்தார்.
இதேவேளை பிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் தென்னாபிரிக்கா போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவதாகவும், போர்க் குற்றங்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த அமைப்பு விசாரிக்கும் எனவும் தெரிவித்தார். அந்த ஆணைக்குழுவில் சர்வதேச மேற்பார்வையாளர்களும் உள்ளடங்குவார்கள் ரணில் கூறினார்.
ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களோ, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தம் மற்றும் கடந்த 1980களில் சிங்கள இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்கியபோது இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை மூடி மறைக்கவே இந்த ஆணைக்குழு அமைக்கப்படுகிறது என அஞ்சுகின்றனர்.
இப்போது கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது தமது உறவுகளைத் தேடுபவர்களின் அச்சத்தையும் கவலையையும் மேலோங்கச் செய்துள்ளது.
கடந்த 2,300 நாட்களுக்கு மேலாகப் பெண்கள் தலைமையிலான அமைதி வழி போராட்டம் தமது சொந்தங்களைத் தேடி தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இவ்வாறு மனித எச்சங்களைத் தென்படுவதான செய்தி பரவியதும் உறவுகளைத் தேடி அலையும் உறவினர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.




Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
