செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை வீதி, செட்டிபாளையத்தை வசிப்பிடமாக கொண்ட 55 வயதையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வழமை போல் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடற்கரைக்கு நீராடுவதற்காக சென்றிருந்த நபரே உயிரிழந்த நிலையில் கடற்கரையில் கரையொதுங்கியிருந்ததைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரனின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பி.சி.ஆர் பரிசோதனையினை மேற்கொண்ட பின்னர் விசாரணைகளை முன்னெடுக்கும் படியும், அதனைத் தொடர்ந்து பிரேதத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
