புத்தளம் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல்போன மீனவர் ஒருவர் இன்று மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை சவேரியார் புரம் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கடலில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட மீனவர் புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த ராமையா ஜேசுதாசன் வயது-(47) என்றும் தெரியவந்துள்ளது.
சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது சடலம் ஒன்று கடலில் மிதப்பதைப் கண்ட நிலையில் சிலாவத்துறை கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த ராமையா ஜேசுதாசன் என தெரியவந்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி குறித்த மீனவர் புத்தளம் கடற்பரப்பிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையிலேயே காணாமல்போயுள்ளார்.
இந்த நிலையிலேயே இரு தினங்கள் கழிந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.