உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! ஒரு லட்சம் பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கை தயார்?
2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை சுமார் 100,000 பக்கங்கள் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதனை அச்சிடுவதற்கு சுமார் 10 மில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்களின் படி, இதனை அச்சிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாட்சிகளின் சாட்சியங்கள் சுமார் 40,000 பக்கங்களை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழு அதன் விசாரணைகள் ஜனவரி 27 அன்று முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சிஐடியின் முன்னாள் பணிப்பாணர் ஷானி அபேசேகர ஆணைக்குழு முன் இறுதியாக சாட்சியமளித்தார்.
ஆணைக்குழுவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், அதன் விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.