ஒலுமடுக்குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு - ரவிகரன் வலியுறுத்தியுள்ள விடயம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, ஒலுமடு கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடுக்குளம் வெள்ள அனர்த்தம் காரணமாக உடைபெடுத்துள்ளதால் தாம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அதன் கீழ் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று (17.12.205) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததுடன், குளத்தின் சீரமைப்பு வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கவனம்
குறிப்பாக ஒலுமடு குளத்தின் சீரமைப்புப் பணிகள் பருவமழை தொடங்கிய பிற்பாடு, பொருத்தமற்ற காலப்பகுதியில் ஒப்பந்ததாரர் தொடங்கியதன் காரணமாகவே குறித்த குளம் உடைப்பெடுத்ததாக இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
இதனால் குறித்த குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள 150 விவசாயிகளின் 280 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை எதிர்வரும் நாட்களில் நீரின்றி பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

எனவே குறித்த குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழை நீரையாவது குளத்தில் சேகரிக்கும் நோக்குடன், உடைந்துள்ள குளக்கட்டின் பகுதியை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மெனவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
இந்நிலையில் குறித்த குளம் வெள்ள அனர்த்தத்தின்போது உடைப்பெடுத்துள்ள நிலையில், நிரந்தரமான சீரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்குரிய முன்மொழிவுகளை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உரிய தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் விவசாயிகளிடம் தெரியப்படுத்தினார்.
தொலைபேசி அழைப்பு
மேலும் குறித்த குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும் நோக்கில், குளக்கட்டினை தற்காலிகமாக சீரமைப்புச் செய்து நீரைச் சேகரிப்பதற்குரிய வேலைகளை முன்னெடுப்பது தொடர்பில் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசியிருந்தார்.

இதன்போது கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதிலளிக்கையில், தொடர்மழை பெய்து வருவதால் தற்போது தற்காலிக சீரமைப்பு வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.
குறிப்பாக குளக்கட்டினை தற்காலிகமாக சீர்செய்வதற்குரிய உள்ளீடுகளையும், இயந்திரங்களையும் கொண்டு செல்வதற்கு பாதைப்பிரச்சினை காணப்படுவதாக இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.
எனவே தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மழையற்ற வானிலை நிலவினால், ஒப்பந்ததாரருடன் தாமும் கலந்துரையாடி விரைவாக குளக்கட்டினை தற்காலிகமாக சீர்செய்வதற்குரிய ஏற்பாட்டினை தாம் முன்னெடுப்பதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam