ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2 ஆயிரம் பேர் மரணம்
ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று (21.03 2025) இடம்பெற்ற நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் மீதான வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ரவிகரன் வலியுறுத்தினார்.
கோட்டாபய ஆட்சிக்காலம்
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு 2020.01.01இல் வழங்குவதற்குரிய ஓய்வூதியமானது நாட்டின் நிலமை காரணமாக கோட்டாபய அமைச்சரவையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சார்பான ஓய்வூதியர் சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்தில் வழக்கு தாக்கல் செய்து போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது அவ்வாறு போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவு தொழில் சங்கங்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கையூட்டி வந்தனர்.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வுபெற்ற பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு - செலவுத்திட்டத்தில் இதற்கு தீர்வுகிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.
வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடு
அதாவது 2020ஆம் கிடைக்க வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு 2025ஆம் ஆண்டுவரை, ஐந்தாண்டுகளாக பெறமுடியாது காத்திருந்தவர்களுக்கு தற்போது வரவு - செலவுத்திட்டத்தில் அந்தக் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக 2027வரை வழங்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளளது. இக்கொடுப்பனவு பெறவேண்டிய 2000 பேரளவிலான ஓய்வூதியர்கள் இறந்து விட்டனர்.
இந்நிலையில் தற்போதைய அரசும் ஓய்வூதியர் வாழ்வுக்காலம் பற்றி சிந்திக்காது, குறித்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குவதை மேலும் மூன்றாண்டுகளுக்கு பிற்போட்டுள்ளதென கவலையடைகின்றனர்.
எனவே, மக்களுக்கான அரசபணியில் தங்களுடைய கரிசனையைப் பண்பாக செய்து, இன்று ஓய்வில் இருக்கும் சேவையாளர்களை நிம்மதியாக ஓய்வுக் காலத்தை கழிப்பதற்கு உதவி செய்யுங்கள். அந்தக் கொடுப்பனவுகளை கூடியவிரைவில் உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
