ஊடகங்களின் முன்னால், நடப்பு அரசியல் தொடர்பில் பேசமறுத்த முன்னாள் முக்கிய அமைச்சர்!
முன்னாள் மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகளால் ஜனாதிபதியான பின்னர், ஏன் அவருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது என்பதை ரவி கருணாநாயக்க கோடிட்டு காட்டினார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மைத்ரிபால சிறிசேனவுக்கு பெருந்தொகை டொலர்கள் கிடைத்த விடயமே இந்த முறுகலுக்கான ஆரம்பமாக இருந்தது என்று ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்
எனினும் இன்று வரை அந்த டொலர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
2015ஆம் ஆண்டு போதைக்கு எதிராக பேசிய அவர் இரண்டு விருந்தகங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு உத்தரவிட்டார்
இரும்பு தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கை வழங்குமாறு உத்தரவிட்டார்.
கேள்விப்பத்திரம் கோராமல், நிறுவனம் ஒன்றின் 300 கோடி ரூபாவுக்கான சூரிய சக்தி திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு கட்டளையிட்டார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு குண்டு துளைக்காத வாகனத்துக்கு நிதியொதுக்கவேண்டாம் என்று கூறினார்
முதலமைச்சர்களுக்கு நிதியொதுக்கவேண்டாம் என்று உத்தரவிட்டமை போன்ற மைத்திரிபாலவின் செயல்கள் காரணமாகவே அவருக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் பிரச்சினை உருவானதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்
தாம், பொதுவில் தோன்றாது அமைதியாக இருந்தபோதும், மைத்ரிபாலவின் கருத்துக்களை கண்டு பதிலளிக்காமல் இருக்கமுடியாது என்பதற்காகவே இன்று ஊடக சந்திப்பை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை நடைமுறை அரசியல் தொடர்பாக எந்த கேள்விக்கும் பதில் வழங்க அவர் மறுத்துவிட்டார்.