ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது! சட்டமா அதிபர் அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என சட்ட மா அதிபர் தப்புல லிவேரா நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
சட்ட மா அதிபரின் இணைப்புச் செயலாளர் நிசாரா ஜயரட்ன இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரம் ரஞ்சனுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாகின்றது என்பதனையே சட்ட மா அதிபர் திணைக்களம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.
எனினும், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக எவ்வித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினம் பிரேமலால் ஜயசேகர என்ற உறுப்பினர் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றார் எனவும் இதனால் ரஞ்சனுக்கும் சிறையிலிருந்து அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.