2023 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே ஐ.தே.கட்சியின் தலைவர்!
கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் இந்த ஆண்டு பொதுச் செயலாளர் பதவியில் மாத்திரம் மாற்றம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனவரி மாத இறுதியில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அந்த கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்க ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதுடன், பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக ஷமல் சேனரத் கடமையாற்றி வருகிறது.
அதேவேளை, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை கட்சியின் தலைவர் பதவியில் இருக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
உப தலைவர், தேசிய அமைப்பாளர், பிரதித்தலைவர், பொருளாளர் பதவியில் தற்போது இருப்பவர்களே தொடர்ந்தும் அந்த பதவிகளில் கடமையாற்ற உள்ளனர்.
கட்சியின் ஊடகப் பிரிவை மறுசீரமைத்து வலுப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.