அவசர கால சட்டம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரணிலிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
“அவசர கால சட்டத்தை நீக்கி, கைது செய்து அடைக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லையெனின் சர்வகட்சி அரசாங்கத்திற்கான அழைப்பு என்பது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் ஒரு நாடகமாகும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை (3) நாடாளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரை மீதான விவாதத்தில் நேற்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“தமிழ் சமூகத்தினர் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வு காண்பது அவசியமாகிறது.
தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பான ஜனாதிபதியின் கருத்து
யுத்தம் காரணமாக அவர்கள் பல சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அவர்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். வடக்கின் பொருண்மிய மேம்பாட்டு விடயத்தில் நாங்கள் புதிய வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும்.
இலங்கையை மீள்கட்டுமானம் செய்யும் வேலைத்திட்டத்திற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களின் ஆதரவினைப் பெறமுடியும் என நம்புகிறோம்.
அவர்களது வருகையினையும் தமது நாட்டில் அவர்களது முதலீடுகளையும் நாம் எதிர்பார்க்கிறோம். என ஜனாதிபதியின் உரையில் வடக்கு –கிழக்கு வாழ் தமிழர்கள் தொடர்பாக இந்தவொரு குறிப்பினை மட்டுமே காணமுடிந்தது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதி
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை பெற்றிருந்தது. அப்பொழுது விக்ரமசிங்க பிரதமராகவும் குமாரணதுங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கமைய ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். சமாதான நடவடிக்கைகள் என அழைக்கப்பட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
விடுதலைப்புலிகளுடனான பேச்சவார்த்தைகளில் ஒஸ்லோ பரிவர்த்தனை அறியப்பட்ட உடன்பாடு எட்டப்பட்டது. அக்காலகட்டத்தில் பேர்கோவ் பவுண்டேசன் அமைப்பு பணிந்துரைக்கப்பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒஸ்லோ பரிவர்த்தனை வெளியானபோது அந்தப் பரிவர்த்தனையில் குறிப்பிடபட்ட விடயங்களுக்கும் நாட்டிலிருந்து நடைபெற்ற விடயங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது.
இந்த விடயத்தில் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் கரிசனையிருந்தது. நான் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருந்தேன்.
சமஷ்டி ஆட்சிமுறைமை
சமஷ்டி முறையை பரிசீலிப்பதாக ஒரு பரிவர்த்தனையுடன் விக்ரமசிங்க உடன்பட்டிருந்தாலும் நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் அதற்கு நேரெதிராக அமைந்திருந்தது.
இந்நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் அப்போது அராசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதியை குற்றசாட்டி தப்பித்துக்கொள்ளும் அணுகுமுறையே அவரால் கையாளப்பட்டது.
அரசகட்டமைப்பை ஒரு சம்ஷ்டி முறையாக மாற்றுவது தொடர்பில் அரசுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ எந்த அக்கறையும் இருப்பதனை நாட்டு நிலவரங்கள் வெளிக்காட்டவில்லை.
விடுதலைப் புலிகள் மீது பழியை சுமத்தித் தப்பிக்கொண்டது. தமிழர்களே சமஷ்டித் தீர்வு விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை என பழி சுமத்தப்பட்டது. அவர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டது.
அந்நேரத்தில் அவருடன் முரண்பட்டுக்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதியைக்
காரணங்காட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதிலிருந்த தப்பியிருக்கலாம்.
ஆனால் இன்று நிலைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளது.
அவர் மிக முக்கியமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக உள்ளதால் முழு நாடும் அவரது விரல் நுனியில் இருக்கிறது. எங்களது கட்சியையும் வேறு ஒருசிலரையும் தவிர மிகுதி உறுப்பினர்கள் அவருடன் இணைந்து பணிபுரியத் தயாராக இருக்கிறார்கள்.
அவருக்கு இந்த அவையின் முழு ஆதரவு இருக்கிறது. இவ்விடயத்தில் நம்பகத்தன்மை தமிழர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்கள். எது எப்படியிருப்பினும், இறுதியில் அவர் எவ்வாறு இந்நாட்டின் ஜனாதிபதியானார் என்பதனைப் பிரதிபலிக்க வேண்டியவராக உள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம்
போராட்டம் சில சமயங்களில் வன்முறைவயப்பட்டதாக இருந்தது. ஆனால் அதனை அவர் இப்போது பயங்கரவாதம் என்றும் அழைக்கிறார்.
அவர் எதிர்க்கட்சி வரிசையில் அமரந்திருந்தபோது இப்போராட்டத்தை அவர் பயங்கரவாதம் என அழைக்கவில்லை. மாறாக, மக்கள் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என திரும்பத்திரும்பக் கூறியிருந்தார்.
ஒரு வன்முறையற்ற போராட்டம் வன்முறையற்ற வகையில் முன்னெடுக்கப்படும் போது, முழு நாடும் மாற்றம் அவசியம் என்று கூறும் போது, இந்தப் போராட்டத்தின் மூலம் தான் ஜனாதிபதி எனும் இந்நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள்.
இதற்கமைய பதவிக்கு வந்த பின்னர், எந்த வழிமுறையில் நீங்கள் ஜனாதிபதிப் பதவிக்கு வந்தீர்களோ அந்த வழிமுறையையே பயங்கரவாதம் என்றும் வன்முறை என்று வர்ணிக்கிறீர்கள்.
மக்களின் குரலை நசுக்கி அதனைப் பூச்சியத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அக்கட்சியினருக்கு தனது நன்றியறிதலை வெளிப்படுத்துவதே இப்போது அவருக்குள்ள ஒரே வழியாக இருக்கிறது. அதனையே அவர் செய்கிறார்.
இதற்கமைய உடனடியாக அவசரகால சட்டத்தை நீக்கி கைதுசெய்து அடைக்கப்ப்ட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இல்லையெனின் நீங்கள் அழைப்பு விடுத்திருக்கின்ற சர்வகட்சி அரசு என்பது உங்கள் பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் ஒரு நாடகம் என்பதே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்” என தெரிவித்துள்ளார்.