பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! ரணிலை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சுக்கான பல மாடி கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்வதில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் ரணில் கைது செய்யப்படலாம் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நிதி முறைகேடுகள்
மூத்த திரைப்பட நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமான இந்த கட்டடம், முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது.
இதற்கான மாத வாடகை 21 மில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரணிலை கைது செய்ய நடவடிக்கை
இதனால், எதிர்காலத்தில் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ரணில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதி மோசடி தொடர்பில் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.