மட்டக்களப்பில் காதல் முறிவால் யுவதி எடுத்த விபரீத முடிவு
மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து விபரீத முடிவு எடுத்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(23.01.2026) இடம்பெற்றுள்ளது.
தாழங்குடாவைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுஷாலினி என்பவரே இவ்வாறு விபரீத முடிவு எடுத்துள்ளார்.
விசாரணை
சம்பவ தினமான நேற்று இரவு 7.15 மணியளவில் குறித்த பெண், கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் குதித்துள்ளார்.

இந்த நிலையில், அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து யுவதியை மீட்டுள்ளனர். அதன்பின்னர்,தோனி மூலம் கரைக்குக் கொண்டு வந்துள்ளதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யுவதி கடந்த வருடம் உயர்தர பரீட்சை தோற்றியவர் எனவும் காதல் விவகாரத்தால் இவ்வாறு விபரீத முடிவு எடுத்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த யுவதியின் உயிர்மாய்ப்பை அடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இளம் யுவதிகள் 75 வயதுடைய 3 முதியோர் வரை 16 பேர் உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் தொடர்ச்சியாக உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதையடுத்து பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.