பிரதமராக நியமிக்கப்பட முதல் நாள் தமிழ் அரசியல்வாதியை சந்தித்த ரணில் கூறிய விடயம்! வெளிவரும் தகவல்
பிரதமராக நியமிக்கப்பட முதல் நாள் ரணில் விக்ரமசிங்க தன்னை வஜிர அபேவர்தனவின் வீட்டில் வைத்து சந்தித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாணசபைகளை தாண்டி மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்து பரவலாக்கி மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த கூடிய திட்டமொன்றை நோக்கி பயணிக்க வேண்டும், இதன்மூலம் செலவுகளை கணிசமாக குறைக்கலாம் என கூறிய கருத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அப்போது சபையில் இருந்த நிலையிலே, தான் மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த தயார் என தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, இந்த விடயத்தை ஊடகங்கள் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளதாக கூறி ஜனாதிபதி அலுவலகம் கருத்து வெளிப்படுத்தியுள்ளது.
எனினும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முதல் நாள் என்னை சந்திக்க வேண்டும் என கேட்டு, வஜிர அபேவர்தனவின் வீட்டில் வைத்து சந்தித்த போது என்னிடம் அவர், தமிழருடைய இனப் பிரச்சினை இப்படி நீடித்து கொண்டு போக விட முடியாது, இதற்கு தீர்வு கட்டப்பட வேண்டும் என சொன்னார்.
இந்த நிலையில் நான் அவரிடம், அந்த தீர்வு ஒரு சமஷ்டியின் அடிப்படையில் அமைய வேண்டும். நீங்கள் இதில் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.
எனினும் அந்த விடயம் நடைமுறை சாத்தியமில்லை என நிராகரித்து, என்னிடம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்ற விடயம் தொடர்பாக தான் பேசினார் என குறிப்பிட்டுள்ளார்.