முக்கிய அமைச்சு பதவி தொடர்பில் ரணிலுக்கு அழுத்தம் - பின்னணியில் காய்நகர்த்தும் சம்பிக்க
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியை பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு வழங்குமாறு அரசாங்கத்தின் சிரேஷ்டர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக இருந்த அவர் எவ்வாறு அமைச்சுப் பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டார் என்பதைக் கருத்தில் கொண்டு, நெருக்கடியான இந்த தருணத்தில் அவருக்கு மீண்டும் முக்கியமான அமைச்சுப் பதவியை வழங்குவதே பொருத்தமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சு
குறிப்பாக அந்த காலப்பகுதியில் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்றை சம்பிக்க ரணவக்க ஈடுபடுத்தியிருந்தார்.
அதற்கமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நாளாந்த வருமானமான ரூபாயில் ஒரு பகுதி அந்நியச் செலாவணியை கொள்வனவு செய்யப் பயன்படுதப்பப்பட்டது. இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலர்கள் பிரச்சினை நிறுவனத்திற்கு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணிலிடம் கோரிக்கை
இந்நிலைமையை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ள அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கடந்த இரண்டு வருடங்களாக எரிசக்தி அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் காஞ்சன விஜேசேகர சிறப்பாக செயற்பட்டாலும் அவருக்கு இன்னும் போதிய அனுபவம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நெருக்கடியான தருணத்தில், அனுபவமிக்க அரசியல்வாதியாக, மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய அரசியல்வாதியாக, சம்பிக்க ரணவக்க இந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சம்பிக்க ரணவக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி தற்போது சுயேச்சை உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.