நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் மட்டுமே : செந்தில் தொண்டமான்
பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டு, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதால் அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், நாம் கிழக்கு மகாணத்தில் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். முப்பது வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதால் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணம் வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
எனவே, இந்த மாகாணத்திற்குரிய மூன்று மாவட்டங்களினதும் வளர்ச்சியில் அதிக கவனம் எடுக்குமாறு ஜனாதிபதி எனக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வளங்கள் தொடர்பில் நாம் தற்போது கண்டறிந்துள்ளோம்.

உதாரணமாக இறால் வளர்ப்பு, கனிய வளங்கள், துறைமுகம், விமான நிலையம், நீர் வளம், சுற்றுலாத் துறை மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். எனவே, இவற்றை மேம்படுத்துவதன் மூலம் எமது நாட்டின் கடன்களை அடைப்பதற்கு கிழக்கு மாகாணம் மாத்திரம் போதுமானது என்பதைக் கூற வேண்டும்.
அந்தளவு வளங்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றன. அவற்றை முறையாக அபிவிருத்தி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது கிழக்கு மாகாணம் அதற்கு நிதிப் பங்களிப்பை வழங்க முடியும் என்று நான் நினைக்கின்றேன்.
சம்பள உயர்வு
எதிர்காலத்தில் முழு நாட்டுக்கும் பொருளாதார பங்களிப்பை வழங்கும் முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. பொதுவாக இரண்டு வருடங்களில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகி உள்ளது. இதற்காக நாம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளோம். தற்போது பெருந்தோட்டக் நிறுவனங்கள் அவர்களின் முன்மொழிவுகளை வழங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடி
பெருந்தோட்டத் தொழில் என்பது அந்நியச் செலாவணியுடன் தொடர்புபட்டது. எனவே, டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு ஏற்பவும் உள்நாட்டு வாழ்க்கை செலவினைப் பொருத்துமே சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும். விரைவில் மலையக மக்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.

எமது நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது இருக்கும் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. அவர் அதனை செய்தும் காட்டியுள்ளார்.
எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை. உணவு இல்லை. மருந்துகள் இல்லை என அன்று இருந்த அதே அரசை நடத்திச் செல்ல முடியாது என அனைவரும் கைவிரித்தபோது, அதே அரசை எடுத்து அதனைத் தற்போதைய ஜனாதிபதி மேம்படுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
எதிர்காலத்தில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாது. தற்போதுள்ள வரி விதிப்புகள் அனைத்தும் ஜனாதிபதி விரும்பி ஏற்படுத்தியவை அல்ல. மாறாக சர்வதேச நாணய நிதியம் எமது நாடு பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்காக இட்ட நிபந்தனைகளாகும்.

நாம் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வேலைத் திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார். ஏனைய நாடுகள் நாம் எவ்வாறு ஒரு குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் மீண்டு வந்தோம் என்பதை ஆராய்கின்றன.
பல்வேறு நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைத்தும் இன்னும் மீட்சி பெறாமல் இருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்து சில மாதங்களிலேயே எமது நாட்டை மீட்டெடுத்து விட்டார். பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டதாகக் கூறவில்லை.
ரணிலுக்கு ஆதரவு
ஆனால், இன்னும் ஒரு வருடத்திற்குள் எமது நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கே முயற்சி எடுத்து வருகின்றார். ஜனாதிபதி பதவி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு நாட்டைப் பொறுப்பளித்தால், அதனைப் பற்றி அறிந்துகொள்ளவே அவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்களாகும்.

அதற்குள் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி எமது நாடு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. நாம் ஏற்கனவே பல தேர்தல்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டவர்கள். ஆனாலும், தற்போது அவரைத் தவிர வேறு எவரும் இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடியவர் இல்லை.
எனவே, நாம் தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்." என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam