நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்! - ரணில் கோரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை முடக்குவதற்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், இந்த நடவடிக்கை பொது மக்களின் உயிரை காப்பாற்ற உதவும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் கோவிட் -19 தொற்றுநோய் வேகமாக பரவி வருவதாகவும், இந்தியாவில் கோவிட் பரவலை தவிர, ‘கருப்பு பங்கசு’ என்ற மற்றொரு நோயும் பரவுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த நோய்களிலிருந்து நாட்டு மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும்” எனவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
அண்மையில் பல இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் (WHO) கொழும்பு அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, அடுத்த சில வாரங்களில் கோவிட் -19 வைரஸ் நாட்டில் வேகமாக பரவும் என்று அவர்கள் கணித்துள்ளனர். “நாம் இன்னும் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது, நம் நாட்டில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு கூட இருக்கலாம். அதுவரை நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே, மருத்துவ ஆலோசனைகளின்படி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். "நாட்டை மூட மருத்துவர்கள் அறிவுறுத்தினால், நாங்கள் அதை செய்ய வேண்டும்.
அதன் பிறகு நாம் வாராந்திர அறிக்கைகளை எடுத்து வைரஸ் பரவலின் முன்னேற்றத்தை சரிபார்க்கலாம். இது தவிர வேறு வழிகள் உள்ளனவா என்பது எனக்குத் தெரியாது.
கோவிட் -19 தொற்றுநோயின் தொடர்ச்சியான பரவல் ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்திற்கு ஒரு அபாயகரமான அடியாகும்.
எனவே, நோய் தொற்று பரவுவதை நிறுத்தி உயிரைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். அது முடிந்தால், பொருளாதார சேதத்தை எங்களால் குறைக்க முடியும், ”என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.