கோட்டாபய தொடர்பில் சபாநாயகர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதை அடுத்து இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ள போதிலும், ஜனாதிபதியின் இருப்பிடம் தொடர்பான தகவல் தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவரவில்லை.
மூன்றாம் இணைப்பு
சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அவசரமாக கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோர கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல கட்சித் தலைவர்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நாட்டில் நிலவும் நிலைமையை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரைவில் சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கூடவுள்ளனர்.
முதலாம் இணைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக இவ்வாறு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு முற்றுகை
இன்றைய தினம் காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொழும்பை வந்தடைந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகலளவில் ஜனாதிபதி மாளிகை முன்பாக ஒன்று திரண்ட மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
அத்துடன் தற்போது ஜனாதிபதி செயலகத்தையும் மக்கள் கைப்பற்றி உள் நுழைந்துள்ளனர்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.