ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து சம்பிக்க ரணவக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்ததாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போதைய அரசாங்கம், உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன(Upali Abeyratna) தலைமையிலான மூன்று பேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தது.
அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் முடிவுக்கு அமைய கண்டறியப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய தண்டனை வழங்குவது குறித்து ஆராய ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன(Priyantha Jayawardena) தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.
உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் முடிவுக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊழல் விசாரணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்களின் தீர்மானங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல் நடந்துள்ளதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe), பாட்டலி சம்பிக்க ரணவக்க(Champika Ranawakke), அனுரகுமார திஸாநாயக்க(Anura Dissanayakke), சரத் பொன்சேகா(Sarath Fonseka), ராஜித சேனாரத்ன(Rajith Senaratne), மங்கள சமரவீர(Mangala Samaraweera) ஆகியோர் பிரதான குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நியமித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, ஒருவர் குற்றவாளி என முடிவுக்கு வந்திருந்தால், அவரது குடியுரிமையை பறிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி, சம்பிக்க ரணவக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை றீட் கட்டளை மூலம் செல்லுப்படியற்றதாக்குமாறு சம்பிக்க ரணவக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தனது மனுவில் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஆணைக்குழுவின் முடிவை நடைமுறைப்படுத்தினால், அது மனுதாரின் அடிப்படை உரிமை மீறப்படும் என்பதால், அப்படியான நடவடிக்கை எடுப்பதை தடை செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.
அத்துடன் மேற்கூறிய பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு மனுதாரருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறும் சம்பிக்க ரணவக்க தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.